பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

17


அவள் இங்கே தங்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ? எல்லாம் போக இவள் எதற்கு அஞ்சுகிறாள்? இந்த வீட்டில் கிரிக்கு உரிமை இல்லையா?

பதில் பேசாமல் இலையைக் கொண்டு வந்து போடுகிறாள்.

கிருத்திகை...பாயாசம், சாதம், பருப்பு, நெய், தயிர், கத்தரிக்காய் துவையல், ரசம், வாழைக்காய் கறி எல்லாம் கொண்டு வந்து பரிமாறுகிறாள். குடிக்க இளஞ்சூடாக வெந்நீர்...

ரத்னா குளியலறையில் நன்றாகக் குளித்து, துணி துவைத்து, ரயிலழுக்கு, மேலழுக்கெல்லாம் போக்கிக் கொண்டு அலசிப் பிழிந்த உடைகளுடன் வெளியே வருகிறாள். பூப் போட்ட வீட்டங்கி அணிந்திருக்கிறாள்.

மொட்டை மாடிக் கம்பியில், தனது சால்வார் கமீஸ், பாவாடை மற்றும் உள்ளாடைகள், ஒரு சேலை எல்லாவற்றையும் உலர்த்துகிறாள். முடியைக் கட்டிய துணியால் துவட்டி, குட்டை முடியை ஷாம்பு மணம் காற்றில் கலக்க, ஒன்றோடொன்று இழை ஒட்டாமல் தட்டி ஈரம் உலரச் செய்கிறாள்.

“இந்த வீடு சொந்தமா கிரி?

“ஹ்ம். வாடகை. மூவாயிரத்தைந்நூறு!”

“ஹாவ்! கம்பெனி குடுக்கும்! பாட்டி சாப்பிட்டாச்சா?”

“ஆமாம். வா, உனக்கும் சாப்பாடு வைக்கிறேன்...”

சாப்பாட்டறை மேசையின் மீது, விருந்தினர் பீங்கான் தட்டுக்களில் ஒன்றை எடுத்து வைத்து கிரி பரிமாற முன் வருகிறாள்.

“வாட் அபெளட் யூ?”

“நீ சாப்பிடு, உனக்கு போட்ட பின் சாப்பிடுவேன்...”