பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

27


கிரிஜா, பாட்டிக்குப் பூரி இட்டுக் கொண்டிருக்கையில் குழந்தைகள் வந்து விடுகிறார்கள். ரத்னாவைக் கண்டதும் இரண்டு பெண்களுக்கும் ஒரே சந்தோஷம். அவர்கள் அறையில் இவளால் ரசிக்க முடியாத மேற்கத்திய ரஞ்சக இசை முழங்குகிறது. ட்ரம் அதிரும் ஒசை குதித்துக் குதித்து இளைஞர் பாடும் குதுகலம்.

“என்னம்மா டிபன்?”

“பூரி பண்ணிருக்கேன். தேங்குழல் இருக்கு...”

“போம்மா, போர்? வெஜிடபிள் பஃப் பண்ணிலியா?...”

“இருந்த பட்டாணியக் காலம சீஸ் கறிக்குப் போட்டுட் டேண்டி...! பால்ல போட்டுத் தரேனே?”

“வேனாம் போ!”

காபியை மட்டும் பருகிவிட்டுப் போகிறார்கள். சற்றைக் கெல்லாம் மூவரையும் கூட்டிக் கொண்டு ரத்னா வெளியே செல்கிறாள்.

ஆறு மணிக்குள் மாமியார் பலகாரம் முடிந்துவிடும். பாவில் நனைத்த பூரியுடன் கிரிஜா மாமியாரை உபசரிக்கப் போகிறாள். கிழவி கைகால் சுத்தம் செய்து கொண்டு நெற்றியில் புதிய விபூதியுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்சிறாள்.

“அம்மா... பூரி எடுத்துக்கறேளா?”

“எனக்கு வேண்டாம்...!”

தலை திருப்பலைக் கண்டதும் சுர்ரென்று கிரிஜாவுக்கு. பற்றிக் கொள்கிறது. விழுங்கிக் கொள்கிறாள். “ஏன் வேண்டாம்?”

“வேண்டாம்னா பின்னையும் பின்னையும் ஏன்னு என்ன கேள்வி? தினம் தினம் தின்ன்றாது. எங்கையில பண்ணிக்க