பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்த நாவல்

சமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.

கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையராய், சுமைதாங்கியாய், மேலும் நகை தாங்கிகளாய் நம்முள் உலா வரும் பெண்கள் பலப் பலர். எது சுதந்திரம் என்றே தெரியாது தவித்தும் மேலைநாட்டு நாகரீகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாது நம்நாட்டுப் பண்பாட்டையும் கைவிட இயலாது தத்தனித்து, கருத்திழக்கும் மகளிரும் பலப் பலர். இப்படியாகக் குழம்பும் பண்பாட்டுத் தெளிவின்மைக்கு ஒர் நல்ல தெளிவைத் தருகிறது இந்நாவல்.

இயற்கையில் நடக்க இயலாத விஷயங்களைத் திரைப் படங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்தும் படித்தும் எரிச்சலுறும் வேளையில் இந் நாவல் புரையோடிய புண்னைக் கீறி மருந்து கட்டுகிறது.

சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் நாம் எங்கே போகவேண்டும். என்ற பாதையையும் தெளிவாக்கிக் காட்டுகிறது. இந்நாவல்.

இந்த நல்ல நாவலை வெளியிடும் வாய்ப்பினை எமக்கு அளித்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு நன்றி.

-தாகம்