பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

67


அன்று கெளரியம்மாளும் கணவரும் இரவு உறங்க வர நேரமாகிறது.

‘ஏம்மா? உன்னைத் தேடினேன். காணலை, ருஷிகேசம் போயிட்டு வந்தோம். கங்கையை எங்கே பார்த்தாலும் அவ்வளவு அழகாயிருக்கு. அக்கரைக்கும் இவரை நடத்திக் கூட்டிண்டு போனேன். கோவிலெல்லாம் பார்த்தாச்சு...நாலு நாள் முழுசாயிட்டுது. ஒரே ஒரு குறைதான் ஆனால்...’

‘என்ன மாமி?...கங்கைக் கரைக்கு வந்துட்டுக் குறையோடு போறது?’

சுவாமிகளக் கிட்டத்தில் பாக்கணும். இவருக்கு ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசை. எங்க மாமனார் இருக்கறச்ச எங்க ஊருக்கு வநது பூஜையே நடந்திருக்கு. முன்சீப்போ இல்லையோ? எல்லாம் இவா கைதான். அவர் பேர் சொன்னாலே சுவாமிகளுக்குத் தெரியும். சொல்வி ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு ...’

‘ஒ, இதுதானா மாமி?...நாளக்கிக் காலம நான் ஏற்பாடு செய்யறேன். இங்க ஒரு பையன் இருக்கிறான். அவன் என் பழைய ஸ்டுடன்ட். கஷ்டமேயில்லை...!’

மறுநாள் காலையில் ஏழரை மணிக்குள் நீராடல், காபி எல்லாம் முடித்துக் கொண்டுவிட்டார்கள். தட்டில் சீப்புப் பழம், கற்கண்டு என்று காணிக்கைப் பொருட்களை ஏந்திக் கொண்டு தருமராஜன் குறிப்பிட்ட விடுதிப் பக்கம் வருகிறார்கள். கிரிஜா உள்ளே செல்கிறாள்.

‘தருமராஜன் இருக்கிறாரா...’

அது அலுவலக அறை போலிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்காரர் ஒருவர், தரைச்சாய்வு மேசையின் பக்கமிருந்து அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.