பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘தாங்க்யூ ...!’

‘நீங்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் பஹன்ஜி!’

‘வேண்டாம்...ஒரு சிறு செய்தி பார்க்கவேண்டி இருந்தது. பார்த்துவிட்டேன்...’ தண்ணிர்பட்டுக் கரையும் ஒவியங் களாய் மனப்பரப்பில் இறுக்கங்கள் கலைகின்றன…

சிறிது நேரத்தில் அவள் ஆடிப் போனாள். இவளா தைரியசாலி? அன்பு, காதல், தெய்வீகம் என்றெல்லாம் கதைகளில், சினிமாக்களில் எப்படி மிகைப்படுத்துகிறார்கள்? அப்படி அவள் சாமுவை விட்டுப்பிரிய முடியாதபடி ஒன்றி விட்டாளா?... நிச்சயமாக இல்லை. திருமணம் செய்த நாளிலிருந்து, அவளுடைய சுதந்திரத்தன்மையைப் பிரித்த தனால், கூட்டுக்குள் அடைபட்டு, ஆளுமையை ஆணி வைத்து இறுக்கினாற்போல் குறுகிப் போயிருக்கிறாள். இதில் குழந்தைகளின் நிராதரவான தன்மைதான் இரக்கத்தினால் அவளை ஒட்ட வைக்கிறது... குழந்தைகளே இல்லை என்றால், அவள் விடுபட்ட பறவை...சாமுவின் மீது உள்ள கரிசனம் அல்லது அக்கறை, குழந்தைகளை முன்னிட்டதுதான்...

ஒருவாறு தேறியவளாக ஒரு தேநீர் கடையின் பக்கம் நின்று, தேநீர் கேட்கிறாள்.

இதெல்லாம், அவள் செய்யக்கூடாத செயல்கள். எளிய யாத்ரீகரும், கூலிக்காரர்களும் குழுமும் தேநீர்க்கடை. பெரிய வட்டையில் பூரி பொரித்து வைத்திருக்கிறான். மண் அடுப்பில் கணகணக்கும் ‘கொய்லா’ கரியின் சுவாலையில் இரும்புச் சட்டியில் பால்கோவாவுக்கான பால் காய்கிறது எண்ணெயும் மிளகாயும் மிதக்கும் கிழங்கு சப்ஜியை ஒரு வட்டையில் இருந்து எடுத்து பூரியில் ஊற்றி யாருக்கோ அழுக்குப்படிந்த துணி உடுத்திய ஆள்கொண்டு போகிறான். மாமியாருக்குத் தெரிந்தால்...?

‘சாய், மாதாஜி...!’