பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சேதுபதி மன்னர் வரலாறு

IV சேது மன்னர்களது நிர்வாகம்

தெளிவான வரலாற்றுச் சான்றுகளுடன் சேது மன்னர்களது ஆட்சியின் மாட்சி பற்றி கி.பி. 1600 முதல் கி.பி. 1795 வரையான காலகட்டத்திற்குரிய செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து சேது மன்னர்களது நாட்டின் பரப்பு வடக்கே திருவாரூர் சீமையிலிருந்து தெற்கே திருநெல்வேலி சீமையின் வடபகுதி வரை அமைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது. கி.பி. 1645 - 1678 வரை அரசோச்சிய மிகச் சிறப்பான மன்னராக திருமலை ரெகுநாத சேதுபதி காணப்படுகிறார். ஆனால் அவரது நிர்வாக முறை பற்றிய செய்திகள் கிடைத்தில. கி.பி. 1713-க்கும் கி.பி. 1725க்கும் இடைப்பட்ட காலவழியில் சேதுபதி பீடத்திலிருந்த முத்து விஜய ரகுநாத சேதுபதி நிர்வாகத் துறையில் ஆற்றிய பணிகளை இராமநாதபுரம் சமஸ்தான வரலாறு தெரிவிக்கின்றது. நிர்வாக நலனுக்கு ஏற்றவாறு சேது நாட்டை இந்த மன்னர் 72 இராணுவப் பிரிவுகளாக அமைத்தார் என்பதும், குடிமக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதற்காகவும், வசூல் கணக்குகளைப் பராமரிக்கவும், மதுரைச் சீமையிலிருந்து வேளாளப் பெருமக்களை வரவழைத்துச் சேதுநாட்டில் கணக்கர்களாக நியமித்தார் என்பதும் தெரிய வருகிறது.[1] அவர்கள் நாட்டுக் கணக்கு என்று அழைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தைச் செம்மைப்படுத்திய மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பதுதான் உறுதியான செய்தியாக உள்ளது.

அறிவும், திறனுமிக்க இந்த மன்னரது அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை (பிரதானி) ஊர்தோறும் சென்று குடிமக்களது நிலங்களின் தன்மை, நீராதாரம் ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு குடிகள் அவர்களது நிலத்திற்குச் செலுத்த வேண்டிய தீர்வையை நிர்ணயம் செய்தார். இதற்காக இவர் சேது நாட்டின் நிலத்தை நஞ்சை புஞ்சை, மானாவாரி, பொட்டல் என்று தரவாரியாகப் பிரிவு செய்தார். மற்றும், அப்பொழுது வழக்கில் இருந்த பண்டமாற்று முறைப்படி குடிகள் தங்களது தீர்வையை விளைப்பொருளாகச் செலுத்துவதற்குப் பதிலாக அவைகளை சேதுநாட்டு நாணயமாகச் செலுத்தலாம் என்ற முறையையும் ஏற்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டில் மின்னல் பணம், சுழிப்பணம், காசு என்ற நாணயங்கள் வழக்கில் இருந்தன என்பதும் அவைகளைப் பொறிக்கக்கூடிய நாணயச் சாலைகள் இராமநாதபுரத்திலும், இராமேஸ் வரத்திலும் இருந்தன என்று தெரிகிறது.


  1. Raja Ram Rao.T-Manual of Ramnad Samasthanam (1891) pg 236