பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சேதுபதி மன்னர் வரலாறு

சந்தனம், செம்பு, அந்த நாட்டுத் துணிகள், கருவாய்ப்பட்டை, ஏலம், கிராம்பு ஆகிய பொருட்களைச் சேதுநாட்டு கீழக்கரைத் துறைமுகத்திற்குச் சுமந்து வந்து சேர்த்தனர். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் 1796-ல் சென்னைக் கோட்டை கவர்னருக்கு வரைந்த மடல் ஒன்றிலிருந்து மேலே சொன்ன பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்காக பார்வதிசேகர நல்லூர் என்ற பார்த்திபனூரில் பெரும் சந்தை ஒன்று கூடியது என்பது புலனாகின்றது.

இவ்விதம், சிறப்பான வேளாண்மையினாலும் வளமான கடல் வணிகத்தினாலும், சேது மன்னர்களது கருவூலம் நிரம்பியது. இதன் காரணமாக சேது மன்னர்கள் இராமேஸ்வரம் போன்ற ஊர்களில் கோவில் கட்டுமானப் பணிகளைச் சிறப்பாக இயற்றுவதற்கும், சேது மார்க்கத்திலும் பிற பகுதிகளிலும், அன்ன சத்திரங்களையும் திருமடங்களையும் அமைத்துப் பராமரிப்பதற்கும் எளிதாக இருந்தது என்றால் மிகையாகாது. சேது மன்னர்களது நிர்வாகத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்காட்டு நவாப்பின் தொடர்பு ஏற்பட்டதால் அமில்தார். மிட்டாதார். சம்பிரிதி என்ற வட்டார வட்ட அலுவலர்களும் நியமனம் பெற்றனர். அலுவலகங்களில் சிரஸ்த்ததார், பேஸ்க்கார், பொக்கிஷதார் என்ற அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். பாரசீக மொழியில் சேது மன்னருக்கும், நவாப்பிற்கும். ஆங்கிலேயருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்துக்கள் கையாளப்பட்டன என்பதை கி.பி. 1795ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், நிர்வாகத்தில் கிஸ்தி. பேஷ்குஷ், வஜா, ஜமாபந்தி, வாயிதா தாலூகா, கஸ்பா, மிக்டா, பசலி, கோஸ்பாரா போன்ற பாரசீகச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது தலையீடு ஏற்படும் வரையில் சேது மன்னர்களது நிர்வாகம் சிறப்பாக நடைபெற்றது புலனாகின்றது. ஆங்கிலேயரது நிர்வாகத்தில் குடிமக்களுடனான தொடர்புகள் சேது மன்னர் காலங்களைப் போன்று நெருக்கமாக இல்லாவிட்டாலும், அவர்களது கடிதங்களிலும், பதிவேடுகளிலும், பாரசீகமொழிச் சொற்கள் தொடர்ந்து வந்துள்ளன.