பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சேதுபதி மன்னர் வரலாறு

வழங்கிய தானங்களில் கி.பி. 1727-ல் நயினார் கோயிலுக்கு வழங்கப்பெற்ற அண்டகுடித் தானம் பற்றிய கல்வெட்டு மட்டும்தான் கிடைத்துள்ளது. இவைகளை விட இன்னும் சிறப்பு வாய்ந்த தொன்மை ஆவணங்களைப் போர்த்துகீசியர் சேது மன்னர் கடிதப் போக்குவரத்து, யாழ்ப்பாணம், தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய ஊர்களில் நிலை கொண்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது உடன்படிக்கைகளும் கி.பி. 1772 - 1794 வரையான கால அளவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் சேது மன்னருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து ஆகியவை சேதுபதிச் சீமை வரலாற்றிற்கு மிகவும் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கூட நமக்குக் கிடைப்பதாக இல்லை. இராமநாத சமஸ்தான நிர்வாக அலுவலர்களது அசிரத்தையாலும், பொறுப்பற்ற தன்மையாலும் இவை முழுவதும் அழிந்து விட்டன.

இவைகளைப் போன்றே கிழவன் சேதுபதியின் மனைவியான காதலி நாச்சியார் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடை பற்றியும் மேலச்சீத்தை கிராம அறக்கொடை, தனுஷ்கோடி சத்திரத்திற்கு வழங்கிய களத்துர் அறக்கொடை. எம்மண்டலமுங் கொண்டான் என்ற ஊரில் அமைத்து இருந்த அன்னசத்திரம் பற்றியும் ராணி மங்களேசுவரி நாச்சியார் வழங்கிய அறக்கொடைகளைப் பற்றியும் விவரம் அளிக்கப்படவில்லை.

கி.பி. 1678 வரை ஆட்சி செய்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்கு வாரிசு இல்லை என மேலே கண்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயில் கட்டி முடித்த இரண்டாவது பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் உள்ள சுவாமி சன்னதி பக்கத்தில் அவரும் அவரின் இளவலும் நிற்பதாக சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இது அவரது மைந்தன் என நினைவுபடுத்துகிறது. இதனைப் போன்றே கி.பி. 1710-ல் கிழவன் ரெகுநாத சேதுபதி மன்னர் வாரிசு இல்லாமல் மரணம் அடைந்ததால் அவரது தமக்கை மகன் (திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் மகன்) சேதுபதியாக அரியணை ஏறினார் என வரையப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மன்னருக்கு இரணசிங்கத்தேவன் என்ற ஒரு மகன் இருந்தான் என்பதும் அவன் சேதுநாட்டின் வடபகுதியான கல்வாசல் நாட்டின் அரசப் பிரதிநிதியாக அமர்ந்திருந்தார் என்பதைக் காட்டு பாவாசாகிபு பள்ளிவாசல் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த விபரங்களை இராமநாதபுரம் மேனுவல் ஆசிரியர் கூட வரைவதற்குத் தவறிவிட்டார்.