பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சேதுபதி மன்னர் வரலாறு

மேலும் மதுரை வழியிலுள்ள போகலூரை அடுத்து பயணிகளுக்காக அன்னசத்திரம் ஒன்றையும் அமைத்தார். (சத்திரக்குடி எனத் தற்போது இந்த ஊர் வழங்கப்படுகிறது.) வேத விற்பன்னர்களுக்காகப் பல கிராமங்களைச் சர்வமான்யமாக வழங்கியதை மங்களேஸ்வரி நாச்சியாரின் 96 தர்மாசனங்கள் என சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஆட்சிக்கு வந்த அதே ஆண்டிலேயே இவரது கணவரான இராமசாமித் தேவர் காலமாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்து கொழும்பு வந்த ஜார்ஜ் வாலண்டினா பிரபு என்பவர் இராமேஸ்வரம் திருக்கோயிலைப் பார்வையிட்டு விட்டு, இராமநாதபுரம் ராணியைச் சந்தித்த விபரத்தை கி.பி. 1804-ல் வெளியிட்ட அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[1] இவர், தன் கணவரின் மருமகனான அண்ணாசாமி என்பவரை கி.பி. 1807-இல் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டார். அண்ணாசாமி மைனராக இருக்கும்போது ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி. 1812-இல் காலமானார்.

II அண்ணாசாமி சேதுபதி (கி.பி. 1812-1815)

இராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்குப் பின், பதவிக்கு வந்த இவர் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் சிறு வயதினராக இருந்ததால், பிரதானி தியாகராஜ பிள்ளை நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். இவரது ஆட்சியில் குறிப்பிடத்தக்கவை ஏதுமில்லை. என்றாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்துராமலிங்க சேதுபதியின் ஒரே மகளான சிவகாமி நாச்சியார் இராமநாதபுரம் சீமையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டு மதுரையிலும் சென்னையிலுமாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் தீர்ப்பு சிவகாமி நாச்சியாருக்குச் சாதகமாய் அமைந்ததால் இராமநாதபுரம் ஜமீன்தாரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகையை வசூலித்து ஒழுங்காகச் செலுத்த முடியாததால் கும்பெனியார் ஜமீன்தாரியை கி.பி. 1815-ல் மீண்டும் அண்ணாசாமியிடம் ஒப்படைத்தனர். அவர் 1820-இல் இறப்பதற்கு முன்னால் தனது மைத்துனர் இராமசாமித் தேவரைச் சுவீகார புத்திரனாக நியமித்தார்.


  1. (Voyages and Travels to India and Ceylon-George Valanyine - Vol IP 140-148.)