டாக்டர். மா. இராசமாணிக்கனார்
241
என்னும் குறிப்பே இல்லை. அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே காணப்படுவது. காலாட்படை 'கைக்கோளப் பெரும்படை' எனப்பட்டது. ஒவ்வொரு படையும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘வில்லிகள், வாள்பெற்ற கைக்கோளர்’ என்னும் பெயர்கள் கல்வெட்டுகளிற் காண்கின்றன. இவற்றால், போரில், வில் அம்பு, வேல், வாள் முதலியனவே பயன்பட்டன என்பது அறியக்கிடக்கிறது. படைகள், வென்று அடக்கிய நாடுகளில் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்தன. சோழர் கடற்படை குறிப்பிடத்தக்க சிறப்புடையது; கடல் கடந்து சுமத்ரா, மலேசியா முதலிய நாடுகட்கும் படைவீரரைக் கொண்டு சென்றது; கடல் வாணிகத்தைப் பெருக்கி வளர்த்த பெருமை பெற்றது.
காசுகள் : இராசேந்திரன் காலத்து அரசியற் செய்திகள் ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியிற் காண்க. இவன் தன் பெயரால் காசுகளை அச்சிட்டு வழங்கினான். அவை ‘இராசேந்திரன் மாடை எனவும். இராசேந்திர சோழக் காசு எனவும் கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளன.
கல்வித்துறை-தமிழ் : இராசேந்திரன் ‘பண்டித சோழன்’ எனப் பெயர் பெற்றவன். அதனால் இவன் தமிழில் சிறந்த புலமை எய்தியவனாதல் வேண்டும். இவனுடைய 'மெய்ப் புகழ்' பல கல்வெட்டுகளில் சிறந்த புலமை உணர்ச்சியுடன் வரையப்பட்டுள்ளது. அதனால் இவனது அவையில் தமிழ்ப் புலவர் சிலரேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. யாப்பருங்கலம், காரிகை என்பன செய்த ‘அமித சாகர’ரும் இவற்றுக்கு உரை வகுத்த ‘குணசாகர’ரும் இக்காலத்தவர் எனக் கூறலாம். சிறந்த சிவனடியாரான கருவூர்த் தேவர் இக்காலத்தவரே ஆவர். இராசேந்திரன் மகனான வீரராசேந்திரன் தமிழ்ப் புலமை அவன் பெயரைக் கொண்ட ‘வீர சோ