88
லும், பெருகிய செல்வத்தை காப்பதிலுமே செலவிட நேர்ந்துவிட்டது" எனப் பதில் கூறி நிற்பர்.
இக் கேள்விக்குப் பதில் தரும் இறைவன் சுலைமான் நபி அவர்களைச் சான்றாக்கிச் செல்வர்களை நோக்கி.
"எல்லாப் படைப்பையும் அவர் கைக்குளாய்
இருந்து பணிவிடை செய்திடவும்
பொல்லாப் புவியினின் வாழ்க்கையெல்லாம்
பொடிந்து மடிந்தாலும் அவர்வாழ்வினில்
அல்லாத் தொழுகையை வழுவாமலே
அறிந்து ஒருகாலும் விட்டாரில்லை
நல்லா நிறைவேற்றிக் கொண்டாரென்று
நாயன் கடுமையாய்த் தான் சினந்தான்."
எனக் கூறுவதாகப் புலவர் பாடுகிறார்.
இப்பாடலில் சான்றாகக் கூறப்படும் சுலைமான் நபி அவர்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது இறைவன் படைப்பித்த உயிரினங்கள் அனைத்துக்கும் அரசராய் அமைந்து அனைத்து உயிர்களையும் காத்துவந்த அரசர்க்கரசர். உலகின் செல்வம் அனைத்தும் அவர் காலடியில். இவ்வாறு பொருட் செல்வமும் ஆட்சித் தலைமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தும் இறைவன் விதித்திருந்த தொழுகைக்கடமையை தொய்வின்றி செவ்வனே நிறை வேற்றிய இறைநேசச் செல்வர் இதனையறிந்து செல்வச் செறுக்கால் இருமாந்து தொழுகையை விட்ட செல்வர் வருந்தி நாணமடைவர். இறைவன் அளிக்கப் போகும் கொடுந்தண்டனையினின்று இனி தப்ப முடியாது என்ற உள்ளவுணர்வுடன் இறை தண்டனையை எதிர்நோக்கியிருப்பர் எனக் குறிக்கிறார் ஷாமுனா லெப்பைப் புலவர் அவர்கள்.