பக்கம்:தமிழ்த்தாய்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவுரைக்கொத்து


நாம் கற்கும் ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகள் அதுபோல் நமக்கு எப்போதும். உதவியுந் துணையுமாய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க.


நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் ஸமஸ்கிருதம் முதலான மற்றமொழிகளை நாம் வருந்திக் கற்கவேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரை மலரின் செந்நிறத்தையும் அதில் துளும்பி வழியுங் கொழுந்தேனையும் அகற்றிவிட்டு, அவற்றிற்கு மாறாய் அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழுநீர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நீரைச் சொரிந்து வைப்பேன் என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைகூடாமல் அத்தாமரை மலர் அழிந்துபோவதுபோல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த பொருளும் உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும்,தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப்பெற்ற நமதுயிரை அவ்வியற்கையினின்றும் மாற்றி அம் மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன்றன்மை இழந்து அழிந்துபோகும். தமிழ்முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றையேனுந் தமது குழந்தைப் பருவந்தொட்டுப் பேசிவருபவர், தாம் பேசும் அவ்இயற்கை மொழிகளையே மேலும்மேலுங் கற்றுத் தமது அறிவை வளம்படுத்தாமல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளையே பழகி வருவராயின்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்த்தாய்.pdf/3&oldid=1722098" இலிருந்து மீள்விக்கப்பட்டது