பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

87


சித்திரம்' என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் எனக் கூறுகின்றது.

இலக்கியம்

பல்லவர் காலத்திலே எல்லாக் கலைகளோடு இலக்கியக் கலையும் ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. பல இலக்கியங்களும் இவர்கள் காலத்திலே தோன்றின. ஆனால் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலே தமிழைவிட வடமொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் பல்லவ அரசர்களால் அளிக்கப்பட்டது. வடமொழிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. மகேந்திர மன்னனே வடமொழியில் 'மத்த விலாசப் பிரகசனம்' என்று ஒரு நாடகம் எழுதியிருப்பது நாமறிந்த தொன்றே . தண்டின், பாரவி, திக் நாகர் என்பவர்கள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்ட வடமொழிப் புலவர்கள் ஆவார்கள். பாரவி எழுதிய வடமொழி நூல் ‘கிராதார்ச்சுனீயம்'; தண்டின் எழுதிய வடமொழி நூல் ‘காவ்யாதர்சம்'. திக்நாகர் ' நியாயப் பிரவேசம்' என்ற வடமொழி நூலை எழுதினார். இவ்வாறு வடமொழி பல்லவர் காலத்திலே நன்கு வளர்க்கப்பட்டபோதிலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஊறு செய்தமைக்குக் குறிப்புகள் காணோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தேவாரப் பாக்களும், இலக்கியச்சுவை ஒழுகும் நந்திக் கலம்பகமும், பெருந்தேவனார் எழுதிய பாரதமும் பல்லவர் காலத்திலே எழுந்தன. மற்றும் சிவத்தளி வெண்பா, யாப்பு இலக்கண நூல்கள், அணி இலக்கண நூல்கள் சிலவும் பல்லவர் காலத்திலே எழுதப்பட்டன. எனவே இதுவரை கூறியவாற்றால் பல்லவர்காலத்திலே வடமொழி இலக்கியங்கள் பேரளவிலும், தமிழ் இலக்கியங்கள் ஓரளவிலும் வளர்ந்தன என்பது தெளிவாகும்.