பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

9


'வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம் என்று
அந் நான்கு எல்லை அகவையின் கிடந்த
நூலது முறையே வாலிதின் விரிப்பின்' எனவும்

கூறுகின்றமையால் பழந் தமிழ் நாட்டு எல்லைகளை அறிகிறோம். மேற்கும் கிழக்கும் கடல்கள் என்றதனாலும் தெற்கில் குமரி என்றதனாலும் தெற்கு எல்லை கடல் அன்று என்பது நன்கு விளங்கும். குமரி என்பது அக்காலத்தில் ஒரு ஆறாக இருந்தது. சிலப்பதிகார காலத்தில் எல்லையும் அதுவே. சிலப்பதிகாரம் நாடு காண் காதையில்,

'வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள'

என்று இளங்கோவடிகள் குறிக்கின்றமையால் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்நாடு குன்றியது என்பது புலனாகும். இங்கு குமரி என்பது மலையினையும், கோடு என்பது சிகரத்தையும் குறிக்கும். சிலர் குமரி என்பது நாட்டின் பெயரென்றும், இன்னும் சிலர் ஆற்றின் பெயரென்றும், வேறு சிலர் மலையின் பெயரென்றும் கூறுவர். இளங்கோ வேனிற் காதையில்,

'நெடியோன் குன்றமும், தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு'

என்றனர்.

அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் “தொடியோள் என்பது பெண்பாற் பெயரால் குமரி என்றாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பௌவம் என்றது என்னையோ வெனின்,