பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் நாடும் மொழியும்


வளர்க்கக் கற்றுக் கொண்டான். மேலும் கூட்டம் கூட்டமாகவும் வாழ்ந்தான். நிலத்தைப் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டான். எனவே ஓரளவு நிலைத்த வாழ்க்கையே புதிய கற்காலத்துக்கு அடிப்படையாகும்.

பழைய கற்கால மனிதன் குகைகளில் வாழ்ந்தான். புதிய கற்கால மனிதனோ புல்லும் ஓலையும் கொண்டு வேய்ந்த குடிசைகளிலே வாழ்ந்தான். நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்ந்து பானையைக் கவிழ்த்த குடிசைகள் இன்றும் நாட்டுப் புறங்களிலே காணப்படுகின்றன. மழை விழுந்தால் ஒழுகாமல் இருக்கக் கவிழ்த்த இப்பானையே பிற்காலக் கோவிற் கோபுரங்களின் கலசங்களாக மாறின. கொஞ்சம் செல்வம் படைத்தவர்கள் மரங்களால் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, சேலம், அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களிலே பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்களால் செய்யப்பட்ட பானை, தாழி, சட்டி, பொம்மை, கிண்ணம், விளக்கு முதலியன மேற்குறித்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன. இப்பாண்டங்களிலே தீட்டப்பட்ட பலவகை வண்ணங்கள் இன்றும் அழியாமல் காட்சி தருகின்றன.

புதிய கற்காலக் கருவிகளிலே நூல் நூற்கும் கருவிகளும் கிடைத்துள்ளன. அவற்றோடு ஆடைகளை மென்மையாக்கும் கருவிகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. முல்லை நிலத்தார் கம்பளி ஆடைகளையும் நெய்தது போலத் தெரிகிறது. தோற்பதனிடு கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு மேலாக நாணயக் கற்கள் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து புதிய கற்காலத்தில் ஆடை நெய்தல், கம்பளி