பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

37


இவர்கள் வாழும் அகன்ற தெருவில் உள்ள பண்டகசாலை முற்றத்தில், சுங்கம் மதிப்பிடப்பட்டு, புலி முத்திரை இடப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குவிந்துகிடக்கும்.

பட்டினக்கடைத்தெருவில் வாயில்கள் தோறும் பலவகைக் கொடிகள் இரண்டு வரிசைகளிலும் கட்டப்பட்பட்டிருக்கும். மிளகு, பொன், சந்தனம், அகில், முத்து, பவளம் பிறவும் எங்கும் மிகுதியாகக் காணப்படும். வெளி நாட்டார் பலரும் பட்டினத்தில் குடியிருப்பர். இந்நகர்வாழ் வேளாளர் அருள் ஒழுக்கம் நிறைந்தவராகவும், வணிகர் நடுநிலை பிறழாத நெஞ்சினராகவும் விளங்கினர். அதிகாலையில் மகளிர் பக்திச்சுவையுடைய பாடல்களைப் பாடுவர். கோவில்களில் குழல், யாழ், முரசு முதலியன ஒலிக்க விழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும். பல படிகளையுடைய உயர்ந்த மாடங்களில் சிவந்த அடியினையும், கிளிமொழியினையும், பவள நிறத்தினையும், மயிலின் சாயலையும் உடைய மங்கையர் நின்று விழாவினைக் கண்டுகளிப்பர். இச்செய்திகளை எல்லாம் பட்டினப்பாலையில் பரக்கக் காணலாம்.

கரிகாலனுக்குப் பின்பு கிள்ளிவளவன் சோழ நாட்டின் அரசுரிமையைக் கைப்பற்றினான். இவன் காலத்தில்தான் புகாரைக் கடல் விழுங்கியது என மணிமேகலைக் காப்பியத்தால் நாம் அறிகிறோம். இதன் பின்பு சோழநாட்டில் குழப்பமும் கொந்தளிப்புமே ஏற்பட்டன. இக்காலை சேரன் செங்குட்டுவன் சோழநாட்டு அரசியலில் தலையிட்டு அமைதியினை ஏற்படுத்தினான். புறநானூற்றின் மூலம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற சோழ அரசர்களும் சோழ நாட்டை நல்ல முறையில் ஆட்சி புரிந்தனர் என்பதை நாம் அறிகின்றோம்.

'சோழ அரசர்களுள்ளே கரிகாலன் எப்படியோ அப்படியேதான் சேரமன்னருள் செங்குட்டுவன். சேரன்செங்குட்டு-