பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

49


சிற்பத்தில் சிறந்து விளங்கிய செந்தமிழ் நாடு, ஓவியத்திலும் உயர்ந்து விளங்கியது. சுவர், மரம், துணிச் சீலை, முதலியவற்றில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஓவியங்களைத் தமிழ் மக்கள் எழுதி மகிழ்ந்தனர். அரண்மனை, கோவில் மண்டபம் இவற்றின் சுவர்களில் நல்ல நல்ல ஓவியங்களை எழுதி அழகுபடுத்தினர். அரண்மனையின் ஒரு பகுதி சித்திர மாடமாக விளங்கியது. பாண்டிய மன்னனது சித்திர மாடத்தை ,

"வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொரு கொடி வளை இக்
கருவொடு பெரிய காண்பின் நல்லில்"

என நெடுநல் வாடையும்,

"கயங்கண்ட வயங்குடை நகரத்துச்
செபியன் றன்ன செஞ்சுவர் புனைந்து"

என மதுரைக் காஞ்சியும் போற்றிப் புகழ்கின்றன. பாண்டியன் நன்மாறன் சித்திர மாடத்தில் உயிர்நீத்த காரணத்தால் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் புலவர்களால் அழைக்கப்பட்டான். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் மூலம் திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரமாடம் இருந்தது எனவும், முருகனை வணங்கிய பின்னர் மக்கள் இம்மாடத்திற்குச் சென்று அங்கு எழுதப்பட்டிருந்த காமன், ரதி, அகலிகை முதலிய பலவகைப்பட்ட ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும் தெரிய வருகின்றது.

"நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்" (பரி-18')