பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ் நாடும் மொழியும்


"இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளகலிகை இவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றியபடி யிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல வெழுத்து நிலை மண்டபம்" (பரி-19)

இதுவரை கூறியவாற்றான் சங்ககாலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலம் என்பது வெள்ளிடை மலை. இக்காலத்தில்தான் தமிழன் நாகரிகமிக்கவனாய் வாழ்ந்தான். பற்பல வகை உணவுண்டு, பட்டினும், நூலினும் ஆடை உடுத்து, கோட்டையையும் கொத்தளமும் கொண்டு வாழ்ந்தான். மேலும் நல்லரசாட்சி கொண்டு நல்லறிவு கொளுத்தும் கலை நலம் பல பெற்று, உயர் வாழ்க்கை நடாத்தினான். நஞ்சு பெய்வதைக் கண்டும் அதனை உண்டு அமைவர் நனி நாகரிகம் வேண்டுபவர் என்று கூறுகிறது தமிழ் வேதம்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுரைத்தான் நற்றமிழ்ப் புலவன் ஒருவன். இவ்வுணர்ச்சி இன்றிருக்குமாயின், உலகப்பேரச்சம் நீங்குமன்றோ? “தீதும் நன்றும் பிறர்தர வரா” என்று உலக உண்மையை உயர்முறையில் விளக்கினான் அதே தமிழன். உலகம் உய்ய, உயர்வாழ்வு பெறத் தமிழர்தம் பண்டைப்பண்பாடு பெரிதும் உதவும் என்பதும் இதனால் பெறப்படுகிறதன்றோ?

பயனைக் கருதாது ஒருவன் நல்வினைகளைச் செய்தல் சிறந்தது என அக்கால மக்கள் எண்ணினர். இதனை,

'தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே' (புறம். 182)
 'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன்' (புறம், 134)