பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

57


இதனால் தமிழன் செல்வாக்கு காப்பிய காலத்திலே வேங்கடத்தையுங் கடந்து சென்றுளது என அறியலாம்.

காப்பிய காலத்தில் மக்கள் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த னர். தமிழ்நாட்டு மனையறம் மாண்புடன் விளங்கியது. மகளிர் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களை ஆர்வமுடன் அயராது செய்தனர். ஆண்டுதோறும் இந்திரவிழா, பங்குனி வில் விழா, வேட்டுவர் குரவை முதலிய விழாக்களை மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்தினர். இந்திரவிழா தலைசிறந்த விழாவாகக் கருதப்பட்டது. இவ்விழா காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின்போது மறக்குடி மகளிரும், மறவரும் காவற்பூதத்துப் பலிபீடிகையினை வழிபடுவர். அடுத்து பூதசதுக்கம் போன்ற ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டப்படும். மங்கலக் கொடி, தோரணம், பூரண கும்பம், பொற்பாலிகை முதலியன கொண்டு நகரையும் கோயில்களையும் மக்கள் அழகுசெய்வர். பின்னர் அரசியல் அதிகாரிகளும், படைவீரரும் பிறரும் ஒன்றாய்க் காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து விண்ணவர் தலைவனை விழுநீராட்டி, பாடிப்பரவி மகிழ்வர். இசைப்புலவர்கள் இன்னிசை வழங்க, நாடக மகளிர் நடனமாட, மக்கள் முறையே கேட்டும் கண்டும் மகிழ்வர். இறுதிநாளன்று மக்கள் கடலாடிக் கானற்சோலையில் களிப்புடனிருப்பர். காட்டில் வாழும் வேடுவர் வரிக்கூத்தாடி கொற்றவையைப் பரவுதலும் காப்பியகாலத்தில் இருந்துவந்தது. இடையர்கள் குரவைக் கூத்தாடிக் கண்ணனைப் பரவினர். நிமித்தம் பார்த்தலும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும் வழக்கத்தில் இருந்தன. பூதங்களுக்குப் பலியிட்டு வழிபடும் வழக்கமும் இருந்தது. மக்கள் அரசனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.