பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ் நாடும் மொழியும்


தில் இருக்கின்றன. இவனது காலத்தில் வடமொழி நாடக ஆசிரியர் பாரவி காஞ்சிக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

மகேந்திரவர்மன்

மகேந்திரவர்மன் சிம்மவிட்டுணுவின் மகன்; கி. பி. 600 லிருந்து 630 வரை ஆண்டிருக்கிறான். இவன் காலத்திலிருந்து பல்லவ-சாளுக்கியப் போர் தொடங்கியது. மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி என்பவன் மகேந்திரவர்மனுக்குரிய வடபகுதியைக் கவர்ந்து கொண்டான். எனவே போர் தொடங்கியது. பின்னர் புலிகேசி படையுடன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனைப் பல்லவன் உடனே எதிர்க்கவில்லை; ஒளிந்து கொண்டான். புலிகேசி பல்லவ நாட்டுக்குள் தாராளமாக எதிர்ப்பின்றிச் சென்றான். பின் திரும்பி தன் நாட்டிற்குச் செல்லும்பொழுது அவனைப் புள்ளலூர் என்ற இடத்தில் வைத்துப் பல்லவன் முறியடித்தான்.

மகேந்திரவர்மன் மன்னன் மட்டுமல்ல; கலைஞனும்கூட. இசை, நாடகம், சிற்பம், ஆகிய கலைகளில் அவன் மிகுந்த தேர்ச்சியடைந்து விளங்கினான். அதுமட்டுமல்ல; அக்கலை வல்ல புலவர் பெருமக்களைப் பெரிதும் போற்றிப் புரந்தும் உள்ளான். வடமொழியில் புலமை மிக்கவன் மகேந்திரவர்மன். இவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வட மொழி நூலை எழுதி உள்ளான். இந்நூல் அக்காலத்தில் நிலவிய புத்தர், கபாலிகர், பாசுபதர் ஆகிய பிற சமயத்தினரைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இவன் காலத்தில் வாழ்ந்தவரே அப்பர் பெருமான். சமண சமயத்திலிருந்து பல்லவனைச் சைவனாக்கிய பெருமை அப்பரையேசாரும்.