பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

75


அபராசிதவர்மன்

நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர் முடிந்த பிறகு பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டை மண்டலத்தைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டான். இது நடைபெற்ற ஆண்டு கி. பி. 895. அபராசிதவர்மனோடு பல்லவர் பரம்பரை முடிவடைகிறது. அதன் பிறகு பல்லவ மன்னர்கள் முடியிழந்து குறுநில மன்னர்களாகச் சோழர்களின் கீழ் வாழலானார்கள். அப்படி வாழ்ந்தவர்களில் ஒருவனே சயங்கொண்டார் புகழும் கருணாகரத் தொண்டைமான். மற்றொருவன் சேந்த மங்கலம் பெருஞ்சிங்கன் ஆவான். சோழப் பேரரசு அழிவதற்குக் காரணமாயிருந்தவர்களில் இவனும் ஒருவன் ஆவான்.

பல்லவர் ஆட்சி முறை

பைந்தமிழ் நாட்டில் பல்கலைகளும் வளர்த்த பல்லவப் பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பல்லவப் பெருநாடு பல ராட்டிரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ராட்டிரமும் பல விடயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ராட்டிரம், விடயம் என்பன முறையே மண்டலம், கோட்டம் எனப்படும். ஆனால் தொண்டை ராட்டிரத்தில் (நாட்டில்) கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகள் இருந்தன.