பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

85


பரவசமுறாமலிருக்க முடியாது. இப்பாறைக்குச் சற்றுத்தள்ளி கண்ணனின் வெண்ணெய்த் திரள் என்று கூறப்படுகின்ற பாறையும், வராக சுவாமி கோவிலும் உள்ளன. இக்கோவிலில் மால் பூதேவியை அசுரரிடமிருந்து மீட்டு வந்த காட்சியை வெகு அழகாகச் சிற்பி படைத்துள்ளான்.

இறுதியில் நாம் காணவேண்டியது கரைக் கோவிலாகிய தலசயனக் கோவிலாகும். கடலலைகள் வந்து மோதும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் காண்போர் கண்களுக்குச் சிறந்ததொரு விருந்தாகும்.

இரண்டாம் நரசிம்மனான இராசசிம்மன் அமைத்த கோவில்கள், மகேந்திரன், நரசிம்மன் ஆகியோரின் கோவில்களினின்றும் வேறுபட்டவை. இவன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. சுண்ணம் சேர்க்காமல் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவில் கற்றளி ஆகும். காஞ்சியின்கண் உள்ள கைலாச நாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில், மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் ஆகியன இராசசிம்மனால் அமைக்கப்பட்டன. 1000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட இக்கோவில்கள் இன்றும் நல்ல நிலையில் நம் நாட்டத்தை எல்லாம் கவரும் வகையில் உள்ளன. இராசசிம்மன் அமைத்த கோவிலினின்றும் கலை நுணுக்கத்தில் சிறிது வளர்ந்த அமைப்புடைய கோவிலை அபராசிதவர்மன் அமைத்தான். புதுக்கோட்டையின் அருகில் உள்ள சித்தன்ன வாசல் குகைக் கோவில் இன்றும் பல்லவரின் கலைப்பற்றை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

பல்லவர் காலத்து வாழ்ந்த சிற்பிகள் மனிதரின் உருவங்களை உள்ளவாறே செதுக்குவதில் தலைசிறந்தோராவர். இவர்கள் செய்த உருவங்கள் மிகவும் பழைமை வாய்ந்தன