பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/106

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102



படும். அந்த வசதிக்காகவே இங்கே இவ்வளவு அடிப்படை பொதுவாகப் போடவேண்டியதாயிற்று. இனி அங்கங்கே அந்தந்த வகையை மட்டும் குறிப்பிட்டுச் சென்றுவிடலாமன்றோ? இனி மீண்டும் திவாகர நிகண்டிற்கு வருவோம்:

திவாகரத்தின் பன்னிரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறைய 9500 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு சொல்செல்வங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் திவாகரப் பாடல்கள் தொல்காப்பியத்தைப் போல் சூத்திர (நூற்பா) வகையைச் சார்ந்தவையாகும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பெற்ற தொல்காப்பிய நூலில் உள்ள நூற்பாக்கள் (சூத்திரங்கள்) சிலவும் இந்த நிகண்டுக்குள் அப்படியே சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இஃது ஒரு வகை மரபு. அதாவது, ஒரு நூலாசிரியர், முன்னோரையும் அவர்தம் நூலையும் மதித்துப் போற்றுவதற்கு அடையாளமாக, அம் முன்னோரது நூலில் உள்ள சில செய்யுட்களை அப்படியே எடுத்துத் தம் நூலில் சேர்த்துக் கொள்வது அக்கால வழக்கம். இது திருட்டு ஆகாது. அவ்வண்ணம் திவாகரத்திலுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள் இரண்டு வருமாறு:—

“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்.”

“ஒருநெறி யன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரினது படல மாகும்.”

மேலுள்ள நூற்பாக்கள் இரண்டும் தொல்காப்பியம்—பொருளதிகாரம்—செய்யுளியலில் உள்ளன.