பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


[1]“பல்லாயிர நிகண்டிற் பண்டிதர்கள் சொன்னபொருள்
எல்லாம் எளிதாய் இனிதுணர...”

என்னும் சிவசுப்பிரமணியக் கவிராயரின் பாடலால் அறியலாம். அப் பல்லாயிர நிகண்டுகளுள் ஒரு சிலவே அழியாது கிடைத்துள்ளன. அவை பற்றிய குறிப்புக்களை மட்டுமே இந்நூலில் காணலாம். அகராதிகளைப் பொறுத்தமட்டில், 1965-ஆம் ஆண்டுவரையும் தோன்றியுள்ள அகராதிகள் பலவற்றோடு, இன்னும் முற்றுப் பெறாமல் வேலை நடந்துகொண்டிருக்கிற அகராதிகள் சிலவுங்கூட இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் சொல்லப்படாமல் விடுபட்டுப் போன நிகண்டுகளும் அகராதிகளும் இன்னும் எவ்வளவோ இருக்கலாம். அவற்றை அன்பர்கள் தெரிவித்தால் அடுத்த பதிப்பில் சேர்க்க முடியும்.

ஐந்து பாகங்கள்

இந்நூல் ஐந்து பாகமாகப் பகுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் அகராதிக் கலையின் வரலாற்றாராய்ச்சி முதல் பாகமாகவும், கிடைத்துள்ள நிகண்டுகளுக்குள் முதலாவதும் மற்ற நிகண்டுகளுக்கு முன்னோடியானது மாகிய சேந்தன் திவாகர நிகண்டைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சி விளக்கம் இரண்டாம் பாகமாகவும், பிங்கலம் முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பிற நிகண்டுகளைப் பற்றிய விவரங்கள் மூன்றாம் பாகமாகவும், நூற்றுக்கு மேற்பட்ட அகராதிகளைப் பற்றிய விளக்கங்கள் நான்காம் பாகமாகவும் இறுதியாகச் ‘சொல்லும் மொழியும்’ என்ற தலைப்பில் சொற்பொருள் பற்றிய மொழியாராய்ச்சி ஐந்தாம் பாகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.


  1. நாமதீப நிகண்டு- பாயிரச் செய்யுள் : 8