பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/112

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

108



பினாக பாணி, பேயோ டாடி,
பூத நாதன், புணர் கங்காளன்,
ஞான மூர்த்தி, ஈசன், அனாதி,
ஐம்முகன், பகவன், ஆதி, பாண்டரங்கன்,
அந்தி வண்ணன், ஆலமர் கடவுள்,
நந்தி, நம்பன், நாதன், தற்பரன்,
கண்ணுதல் மூர்த்தி, கைலையாளி, என்று
எண்ணிய நாமம் இன்னமும் பலவே.”

சிவனுக்குக் கூறப்பட்டுள்ள பெயர்களைக் கூர்ந்து நோக்கின், திவாகரர் காலத்திலேயே தமிழ்நாட்டில் புராணக் கதைகள் மலிந்துவிட்டன என்பது புலனாகும். சங்க இலக்கியங்களில் இத்தகைய பெயர்களைக் காணமுடியாதன்றோ? இதனாலும் திவாகரம் சங்க காலத்தைச் சேர்ந்த நூலன்று என்பது புலனாகும்.

திவாகரத்தில் சமண சமயக் கடவுளாகிய அருகனுக்கு உரியனவாக நாற்பத்து மூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், ஆதியங் கடவுள் பகவன், அறவாழி யந்தணன், எண் குணன், பூமிசை நடந்தோன் என்னும் பெயர்களும் அடங்கியுள்ளன. இப்பெயர்கள் அருகனுக்குரியனவாகச் சூடாமணி முதலிய நிகண்டுகளிலும் சொல்லப்பட்டுள்ளன. இவை, திருக்குறள் கடவுள் வாழ்த்திலுள்ள ஆதிபகவன், மலர் மிசை ஏகினான், அறவாழி யந்தணன், எண்குணத்தான் என்னும் பெயர்களோடு ஒத்துள்ளமை ஆராய்ச்சிக்குரியது. இதைக் கொண்டே, திருவள்ளுவர் ஒரு சமணர் என்று சிலர் கூறுகின்றனர் போலும் இருப்பினும், திருவள்ளுவரைச் சாதி சமயங்கட்கு அப்பாற்பட்டவராக மதிப்பிடுதலே எக்காலத்திற்கும் ஏற்புடைத்தாகுமன்றோ?