பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/113

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

109



‘எல்லாக் கலைகளையும் எழுதுவதற்கேற்ற சொல் வளம் தமிழில் இல்லை; ஆதலின் எல்லாப் பாடங்களையும் தமிழில் நடத்த முடியாது’ என்று பிதற்றும் கையாலாகாத கடைந்தெடுத்த சோம்பேறிகளுக்குத் தமிழ் நிகண்டுகள் பெரிய அறைகூவலாகும். தமிழில் எதையும் குறிப்பிடுவதற்குச் சொல்வளம் உண்டு. இன்னும் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பல சொற்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, காற்று என்னும் பொருளின் தொடர்பாகமட்டும் இருபது சொற்கள் இருப்பதைக் கீழே காணலாம்:—

(காற்றின் பெயர்)

“வாதம், கூதிர், வங்கூழ், கால், வளி,
ஊதை, அனிலம், கோதை, நீழல்,
உலவை, மாருதம், மருத்து, புவனம்,
வாடை, ஒலியே, கூதை, உயிர்ப்பே,
வேற்றலம், கொண்டல், கோடை என்று இருபதும்
காற்றின் பெயரெனக் கருதல் வேண்டும்.”

இவையேயன்றிப் பின்னுள்ள பாடல்களில், வடந்தை, மலயக்கால், தென்கால், தென்றல், சூறை, சாரிகை, சுழற்காற்று முதலிய காற்றின் பல்வகைப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. அம்மம்மா! எத்துணை சொற்செல்வம்!

நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளவற்றோடு தமிழின் சொற்களஞ்சியம் முற்றும் நிறைந்துவிட்டதாகக் கொள்ளக்கூடாது. வழக்கத்திலுள்ள பதினாயிரக்கணக்கான எளிய சொற்கள் நிகண்டுகளில் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று நோக்குவாம்:–

“நென்னலும் நெருநலும் முன்னைநாள் ஆகும்.”