பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/140

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136



ஆண்பெண் கூட்டுறவு முறையாகும். ஆனால் திவாகரத்தில் உள்ள ஆண் பெண் பாகுபாடு இந்த அடிப்படையில் கூறப்பட்டதன்று. மரங்களின் உருவத்திற்கு உள்ள வன்மை, மென்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆண்மரம், பெண்மரம் என்ற பாகுபாடு திவாகரத்தில் பேசப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கவேண்டும்.

கடைசியாக, மலர்களால் தொடுக்கப்பட்ட மங்கலமான மாலைக்கு உரிய பெயர்களைப் பார்ப்போம்.

[மாலையின் பெயர்]

“தொடையல், வாசிகை, சிகழிகை, கோதை,
படலை, அலங்கல், கத்திகை, பிணையல்,
அணியல், சுருக்கை, தொடலை, தாமம்,
தொங்கல், தெரியல், கண்ணி, தார், சூட்டு,
மஞ்சரி, ஒலியல், இலம்பகம், மாலை.”

அப்பப்பா! மாலையைக் குறிக்க இருபது பெயர்களா? இவற்றுள்ளும், இன்ன விதமாய்த் தொடுக்கப்பட்ட மாலைக்கு இன்ன பெயர்—இன்ன இடத்தில் அணியும் மாலைக்கு இன்ன பெயர் என்றெல்லாம் பாகுபாடு உண்டு. இத்தகைய பெயர்ப் பாகுபாடுகள், தமிழ் மொழியின் சொல் வளத்தைக் காட்டுவதோடு, தமிழ் மக்களின் கலை வளத்தையும் செழிப்பான வாழ்க்கை வளத்தையும் அறிவிக்கின்றனவன்றோ?