பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/147

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

143



அறிஞர்கள் பலர் கூடும் சங்கங்களும் கல்விக் கூடங்களுமே கழகம் என்னும் பெயரை முன்னர்ப் பெற்றிருந்தன. பின்னரே, மற்போர்ப் பயிற்சிக்களமும் படைக்கலப் பயிசிற்சிக்களமும் சூதாடு களமும் கழகம் என்னும் பெயர் பெற்றிருக்கவேண்டும். இதற்கு மாறாக, சூதாடும் இடந்தான் முன்னர்க் கழகம் என அழைக்கப்பட்டது; அந்தப் பெயரே பின்னர் அறிவியல் மன்றங்களுக்கும் கடன் வாங்கப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், அன்று தொட்டே அறிஞர்கள் சூதாட்டத்தை இழித்துப் பேசி வருகின்றனர். எனவே, அந்த இழிசெயல் நடக்கும் இடத்திற்குக் கழகம் என்னும் பெயர் முதலில் இருந்திருக்குமானால், அந்த இழிந்த பெயரையா அறிஞர்கள் கூடும் ஆராய்ச்சி மன்றங்களுக்குப் பெயராகச் சூட்டியிருக்க முடியும்? ஒருகாலும் முடியாது! ஆகவே, அறிவு மன்றங்களும் கல்விக்கூடங்களுமே கழகம் என்னும் பெயர்க்கு உரியனவாம். இக்காலத்திலும் உடற்பயிற்சியும் படைப்பயிற்சியும் கல்வித்திட்டத்தில் சேர்ந்திருப்பதைப் போல, அக்காலத்திலும் மற்போர்ப் பயிற்சியும் படைக்கலப் பயிற்சியும் முக்கியம் பெற்றிருந்தனவாதலால், அவை நடைபெறும் இடமும் கழகம் என அழைக்கப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் சூதாடு களத்திற்கு இப்பெயர் வந்த வரலாறு யாதாக இருக்கலாம்? இதற்கும் இதோ பதில் கிடைத்துவிட்டது:

அறிவியல் மன்றங்களில் ஓய்வு நேரத்தில் பொழுது போக்கிற்காகச் சூதாட்டம் நடந்திருக்கலாம் முதலில் பந்தயம் இன்றி ஆடியிருக்கலாம். பின்னர்ப்