பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


“ஊதியம் பசை பயன் பலித்தம் ஆக்கம் என்று
ஓதிய ஐத்தும் இலாப மாகும் ;
பேறும் அதிகமும் பேசுப இலாபம்.”

என்பன பாடல்கள். ஏக்கழுத்தம், செம்மாப்பு என்பன மிகவும் இனிய அழகிய சொற்கள் அல்லவா? நாட்டியம் என்றால் குறிப்பாம். நாட்டியம் ஆடுபவர்கள் தங்கள் உடல் - உறுப்பு அசைவுகளின் வாயிலாகக் குறிப்பாகத்தானே கருத்தை உணர்த்துகின்றனர்! எனவே, நாட்டியம் என்பது பேசாத பேச்சு – நாட்டியக் கலை என்பது பேசாத பேச்சுக் கலை – என்னும் கருத்து இனிது புலனாகும். அடுத்து, காரணம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கிடைக்காத ஏக்கம் சிலருக்கு உண்டு. இனி அந்த ஏக்கம் வேண்டா! பொருட்டு, திறன், வாயில் முதலிய நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளனவே - பயன்படுத்தலாமே! அடுத்தபடியாகப் பசைக்கு வருவோம். உலக வழக்கில் செல்வத்தைப் பசை என்று குறிப்பிடும் பழக்கம் உண்டு. ‘அவருக்குப் பசை ஏறிவிட்டது’, ‘அதில் நல்ல பசை படும்’, ‘அதில் ஏதேனும் பசை படுமா?’, ‘அதில் ஒன்றும் பசை படவில்லை’, ‘பசை இருந்தால் தானே வண்டி ஓடும்!’- என்பன உலக வழக்குகள். இந்தத் தொடர்களில் பசை என்பது பண்ச்சார்பான பொருள்படுவது காண்க. இந்த நயமான உலக வழக்குச் சொல், திவாகரத்தில் இலக்கியச் சொல்லாக ஏறியிருப்பது கண்டு வியக்க!

மேற்கொண்டு சில நிறுத்தல் அளவைப் பெயர்களைப் பார்ப்போம். ஒரு பலம் அளவுக்குத் ‘தொடி’ என்று பெயராம். கால் பலத்திற்குக் ‘கஃசு’ என்று பெயராம். தொடி நூறு நிறை கொண்ட அளவுக்குத் ‘தூக்கு’, ‘கா’, ‘துலாம்’ என்று பெயர்களாம்.