பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/161

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

157



“ஒரு பலப் பெயர் தொடி.”

“கஃசு காற் பலம்.”

“தூக்கும், காவும், துலாமும், நூற்று நிறை.”

என்பன பாடல்கள். கால் பலத்திற்குக்கூடத் தனிப்பெயர் இருந்ததென்றால், தமிழின் சொல்வளத்தையும், அன்றைய தமிழரின் கணக்கியல் கலை நுட்பத்தையும் என்னென்பது! மேலும், இச்சொற்கள் நிகண்டோடு நின்றுவிடவில்லை; இலக்கியத்திலும் எடுத்தாளப்பட்டுள்ளன. சான்றாக, திருக்குறளில் உழவு என்னும் தலைப்பிலுள்ள ஒரு குறளை நோக்குவோம்: ‘நிலத்தில் ஒரு பலம் (தொடி) மண், கால் பலம் (கஃசு) மண்ணாகக் காயும் அளவுக்கு ஏரை ஓட்டி ஓட்டி உழுதால், அந்நிலம் பிடி எருவும் போடாமலேயே நிரம்ப விளையும்’ என்னும் கருத்துப் பொதிந்த

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.”

என்னும் குறளில் தொடி, கஃசு என்னும் சொற்கள் அமைந்துள்ள அழகை நாம் நன்கு சுவைக்கத்தான் வேண்டும்!

இந்தத் தொகுதியிலும் திவாகரர் சேந்தனை மறக்கவில்லை. அம்பல் தலைவன் சேந்தனைப் போல அறிந்தும் அறியாதவர்போல் அடங்கியிருப்பதற்குத் தான் ‘அறிமடம்’ என்று பெயர் என்று அறிமடம் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் இடத்தில் ஆசிரியர் சேந்தனைச் சிறப்பித்துள்ளார்:

“பெருஞ் சேந்தன் அம்பல் பெருமான் போலத்
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புற மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம்.”

என்பது நன்றியறிவிப்புப் பாடலாகும்.