161
நூற்பாவுக்கு, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் உரிய விளக்கம் காணக்கிடக்கிறது.
“கூடியும் கூட்ட மின்மை
குலவிய புலவி யென்ப.
ஊடலே நணுகா ராகி
உரைமறுத் திருத்த லாகும்.
ஆடவர் நீங்க உள்ளே
அடைத்துறல் துனியே என்பர்.
ஊடலைத் தீர்த்தலின் பேர்
உணர்த்தலே ஒல்லல் ஆகும்.”
என்பது சூடாமணி நிகண்டு நூற்பா. இப்பாடலின் இறுதிப் பகுதியில், ஊடல் தீர்ந்த நிலைக்கு ‘ஒல்லல்’ என்று பெயராம் என்ற செய்தி தெளிவாக விளக்கப்பட்டுள்ள தன்றோ? வழி வழி மரபையொட்டிய இந்த விளக்கத்தைக் கொண்டு, திவாகர நூற்பாவின் உண்மைப் பொருளை உணரலாமே! இக்காலத்தில் அகராதி தொகுத்தவர்கள் இதனை அறியாதது வியப்பே!
அன்றியும், ‘ஒல்’ என்னும் சொல்லுக்கு ‘உடன்படுதல்’ என்னும் பொருள் உண்டு என்பது,
“பாசறை யல்லது நீ ஒல்லாயே.”
என்னும் புறநானூற்றுப் (31) பகுதியாலும், அதே சொல்லுக்குப் ‘பொருந்துதல்’ என்னும் பொருளும் உண்டு என்பது,
“கானத்து ஒல்லும் பேரழல்”
என்னும் கந்தபுராணப் பகுதியாலும், அதற்கே ‘பொறுத்தல்’ என்னும் பொருளும் உண்டென்பது,