163
“ஊராண்மை மிக்க செயல்.”
“பேராண்மை அரிய செயல்.”
என்பன திவாகர நூற்பா. எடுப்பான இந்த இரண்டு சொற்களும்,
“பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.”
என்னும் திருக்குறளில் பொருள் பொதிந்து பொலிந்து கிடப்பதை அறிந்து மகிழ்க.
ஆலோசனை, மந்திராலோசனை என்னும் வடமொழி வழக்காறுகளுக்குத் தக்க தமிழ்ச் சொல் அறியாது பலர் திகைக்கின்றனர். இதோ: சூழ்ச்சி, உசாவல், தேர்ச்சி, நூல், எண்ணல் என ஐந்து சொற்கள் உள்ளனவே அப்பொருளைக் குறிக்க!
“சூழ்ச்சி, உசாவே, தேர்ச்சி, நூல் என
யாப்புற எண்ணல் கிளவி யாகும்.”
என்பது நூற்பா. அடுத்து, ‘ஒற்றுமை’ என்னும் சொல்லுக்குக் ‘குறிக்கோள்’ என்று பொருள் கூறுகிறது திவாகரம்
“ஒற்றுமை குறிக்கோள்.”
என்பது நூற்பா. ஒற்றுமைக்கும் குறிக்கோளுக்கும் உள்ள தொடர்பு அறிஞர்களின் ஆராய்ச்சிக்குரியதாம்.
வரையறுத்தல் என்பதைக் குறிக்கக் கணித்தல், குணித்தல் என்னும் இரு சொற்கள் கூறப்பட்டுள்ளன.