பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/169

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

165



நான்கும் மூன்றும் ஏழுதான் - என்றைக்குமே நான்கும் மூன்றும் ஏழேதான்! எவர்க்கும் ஏழெட்டு ஐம்பத்தாறுதான்-எந்த இடத்திலும் ஐம்பத்தாறுதான்-எந்தக் காலத்திலும் ஏழெட்டு ஐம்பத்தாறே தான். எனவே கணிதம் என்பது, மாறாத - திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட ஒரே முடிவுடையது என்பது புலனாகும். ஒரு கணக்கைச் சரியான முறையில் எவர் போட்டாலும் ஒரே விடை வருவது கண்கூடன்றோ? இதனால்தான், கணிதம் என்பது, சரியான—திருத்தமான ஒருவகை அறிவியல் (Exact Science) ஆகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சரியாக - திருத்தமாக வரையறுத்தலுக்குக் கணித்தல் என்று பெயராம். கணிப்பது கணிதம். அதாவது திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டதே கணிதம் என்பது புலப்படும். இத்தனை கருத்துக்களையும், ‘கணித்தலும் குணித்தலும் வரையறுத்தலாகும்’ என்னும் திவாகரப் பாடல் உள்ளடக்கிக்கொண்டிருக்கிறதன்றோ?

அடுத்து, பலவகை வரிப் பெயர்கள் நினைவுகூரத்தக்கனவாம். சிற்றரசர்கள் பேரரசர்க்குக் கட்டும் வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:

“அரசிறை, திறையே,
கப்பமும், மிறையும் காட்டும் அதுவே.”

சுங்க வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:

“உல்கு, சுங்க விறை,
ஆயம், சாரிகை அஃதென மொழிப.”

குடிமக்கள் அரசர்க்குக் கட்டும் வரியைக் குறிக்கும் பாடல் வருமாறு:—

“கரமும், கடனும், கறையும், குடியிறை;
இறுப்பும், வரியும், ஏற்கும் அதற்கே.”