175
என்றும், தமிழ் எழுத்துக்களைத் ‘தமிழ் நெடுங்கணக்கு’ என்றும் அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளதே! இவ்வளவு கருத்துக்களையும் துணிந்து கூறுவதற்கு,
“எழுத்தும் எண்ணும் கணக்கு எனப்படுமே.”
என்னும் திவாகர நூற்பாவும் துணைக்கு வருமே! அடுத்து, ஏழு இசைகளின் பெயர்கள் வருமாறு:—
“குரலே, துத்தம், கைக்கிளை, உழையே,
இளியே, விளரி, தாரம், என்றிவை
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே”
ஏழு இசைகளுக்கு உரியனவாக—ச, ரி, க, ம, ப, த, நி,—என்னும் ஏழு எழுத்துக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வடமொழி முறையை ஒட்டியவை. இவ்வெழுத்துக்களுக்கு ஈடாக—ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள—என்னும் ஏழு தமிழ் எழுத்துக்களையும் திவாகரம் பரிந்துரைக்கிறது:
“ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும்
இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக் குரிய.”
என்பது நூற்பா. தமிழிசையுலகம் இதனை ஊன்றி ஆராய்ந்து உண்மை காணவேண்டும்.
இறுதியாகத் திவாகரத்தில், பொதுவாக ஒலியைக் குறிக்க இருபத்திரண்டு பெயர்களும், ஒலித்தலைக் குறிக்க முப்பத்தேழு பெயர்களும், ஆரவாரத்தைக் குறிக்க இருபத்தொரு பெயர்களும் கூறப்பட்டுள்ளன. மேலும், சில ஒலி வகைகள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. அவை வருமாறு:—