பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

காலத்துக் கைலாச நிகண்டு, ஆசிரிய நிகண்டு, தொகை நிகண்டு, பொதிகை நிகண்டு, கந்த சுவாமியம் முதலியன பற்றிக் குறிப்புக்கள் தருகிறது.

நிகண்டுகள் எவ்வெவ்வாறு அமைந்துள்ளன என்பன பற்றி இந்நூலில் போதிய விளக்கங்கள் உள்ளன. அவற்றின் பாகுபாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கிடையே, ஆங்காங்குச் சிலவற்றின் கால ஆராய்ச்சிகளும் காணப்படுகின்றன. முன்னோர்களின் காலத்து ஆண்டுத் தொடக்கம் ஆவணித் திங்களாக இருந்தமை, கழகம் என்னும் சொல்லின் பழம் பொருள் முதலியன பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்களும் உள்ளன.

மருத்துவத் துறையில் தோன்றிய அகராதிகள் தனியே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நிகண்டு என்னும் சொல்லின் பொருள் பற்றிய குறிப்புக்கள் சிந்தனையைத் தூண்டுவன. ககராதிப் பேர்த் தொகுதி, தகராதிப் பேர்த் தொகுதி என்னும் பழைய தலைப்புக்களின் விளக்கம், அகராதி என்னும் சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்துகிறது.

இந்நூலாசிரியர், புலவர் திரு. சுந்தர சண்முகனாரின் உழைப்பும் ஆராய்ச்சித் திறனும் பாராட்டுக்கு உரியன. தமிழகம் இவ்வரிய நூலை வரவேற்றுப் போற்றுவதாக.

மு. வரதராசன்