பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/78

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74



நிகண்டு நூலின் பெயரென அபிதான சிந்தாமணியாரும் நற்றிணை உரையாளரும் கூறியிருப்பது பொருத்தமுடைத்தன்று. புலவரது நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார் என்னும் பெயரைக் கொண்டு, அவர் ஒரு நிகண்டுநூல் இயற்றியுள்ளார் என்பது புலப்படினும், அந்நிகண்டின் பெயர் தெளிவாகத் தெரியாததால் அது கலைக் கோட்டுத் தண்டாகத்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துவிடக்கூடாது.

கலைக் கோட்டுத் தண்டைப் பற்றிய செய்தி எப்படியிருந்தபோதிலும், கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் பெயருக்கு முன்னாலுள்ள ‘நிகண்டன்’ என்னும் அடைமொழியைக் கொண்டு அவர் ஒரு நிகண்டுநூல் இயற்றியுள்ளார் என்பதுவரை உறுதி.

இந்நிகண்டு, ஏனைய நிகண்டுகட்கெல்லாம் முற்பட்ட முதல் நிகண்டாகவும் இருக்கலாம்; அதனால், அந்த நிகண்டு—இந்த நிகண்டு என ஆசிரியர் எந்தப் பெயரும் வைக்காமல், வெறும் ‘நிகண்டு’ எனவே தம் நூலை அழைத்திருக்கலாம். திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியனபோலின்றி, வெற்றுப்படியாக நிகண்டு என்னும் பெயர்மட்டும் உள்ளதால், ‘ஆசிரியர் ஒரு நிமித்தமும் கருதி ஒரு பெயரும் வைக்கவில்லை; ஏதேனும் ஒரு பெயர் இருக்க வேண்டுமே என்பதற்காக நிகண்டு என இடுகுறியாக வாளா அழைத்துக் கொண்டார்’—என்று நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும் எண்ணி, இடுகுறியாற் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாக, இந்நிகண்டு நூலைக் காட்டியிருக்க வேண்டும்.