பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டி.கே. சண்முகம்

❖47



சரி; உமது புலமைக்குத் தலை வணங்குகிறோம்" என்றார்.

நடிப்பைக் கைவிட்ட கதை

இரணியன், இராவணன், எமன் முதலிய பாத்திரங்களைத் தாங்கிச் சுவாமிகள் நடித்து வந்தாரெனக் குறிப்பிட்டேனல்லவா? அந்த நாளில் இவ்வேடங்களை நடிப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனச் சுவாமிகள் பெயர் பெற்றிருந்ததாகச்சொல்லப்படுகிறது.

நல்ல உடற்கட்டும், எடுப்பான தோற்றமு முடைய சுவாமிகள் வேடந்தாங்கி மேடையில் நிற்கும்போதே பார்ப்பதற்குப் பயமாக இருக்குமாம். ஆவேசத்துடன் நடித்துத் தமது கெம்பீரமான குரலை உயர்த்திப் பேசும்போது சிறு குழந்தைகள் அலறி விடுவார்களாம்.

சுவாமிகள் இவ்வேடங்களில் நடித்த காலத்தில் நிகழ்ந்த சில அதிசயமான சம்பவங்களைப்பற்றிச் சுவாமிகளின் மாணாக்கர்களில் ஒருவரான எனது தந்தையார் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத நிலையில் யாராவது திடீரென்று வந்து பயமுறுத்தும்போதோ, அல்லது அதிர்ச்சியுண்டாக்கத் தக்க பெரும் சத்தத்தைக் கேட்கும்போதோ, "அப்பா! கர்ப்பம் கலங்கி விடும் போலிருக்கிறதே!' என்று கூறுவதுண்டல்லவா?