பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

தில், உலக கிருகத்தில், விஞ்ஞானம் புரட்சியை—ஏற்படுத்தியபடி இருக்கிறது; இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆகிக்கொண்டு வருகின்றனர், எங்கெங்கும் உள்ள மக்கள்—ஆனால், நாம் அல்ல! நாம் மீண்டும், பழய கட்டைவண்டிக் காலம் போதுமென்ற நினைப்புக் கொண்டு, கர்நாடக யுகத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கிவிட்டோம்—பின்னோக்கி!! மூடு பனி விலகுகிறது தற்காலிகமாகத் தேசிய அரங்கிலே புதிய நட்சத்திரமாக, சாது வந்துள்ளார், காண்பீராக!!

துவக்கமே தம்பி! துணிவு துள்ளும்விதமாக அமைந்து விடுகிறது.

கட்டைவண்டிக் காலம்
பின்னோக்கிப் பயணம்
கர்நாடக யுகம்

என்று இடித்துரைக்கிறார், நயனதாரா. கடுமையான கோடை வெப்பத்தைத் தணித்திடும் பூங்காற்றுப் போல, ஒதியமரங்களுக்கு மத்தியில் ஓர் சந்தனத் தருபோல, ஓட்டை ஒடிசல்களுக்கு மத்தியில் கிடந்திடும் ஓர் நல் முத்துப் போல, பழமை, பண்டைப்பெருமை, பரதேசிகளின் பரிபாலனம் என்பனபற்றி எல்லாம் பெரிய இடத்துள்ளார் பேசிடும் இந்த நாட்களில், உலகம் விஞ்ஞானத்தின் உன்னதத் தன்மையினைத் துணைகொண்டு வேகமாக, முன்னேற்றப் பாதையிலே செல்கிறதே, உதவாக்கரைகளே பெற்றதையும் இழந்துவிடும் பேதைமைபோல, அடைந்துள்ள ஓரளவு முன்னேற்றத்தையும் இகழ்ந்துவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறீர்களே! கட்டை வண்டிக் காலத்தின்மீது மீண்டும் மோகமா? என்று கேட்கிறார். கோபம் பொத்துக்கொண்டுதான் வரும், பழமை விரும்பிகளுக்கு. அதிலும் இடித்துரைப்பது என் போன்றவன் எனில், எரிதழலாகுவர். ஆனால், கட்டுரையாளரோ, நானல்ல.

பின்னோக்கி நடத்திடும் இந்தப் பயணத்தில் ஒரு கட்டம் சென்றிடுவோம்—நமது நிர்வாகத் துறைகளிலே சாதுக்கள் வேலைக்கு அமரும் கட்டம்!

நமது வெளிநாடுகள் குறித்த விவகாரத்துறையிலும்!! என்று கூறிக் கேலி செய்கிறார் நயனதாரா.