122
இவைகளையும் எதிர்பார்த்து, இவைகளையும் மீறி, நமக்கு ஆதரவு கிடைத்திடத்தக்க வழி கண்டறிந்து, பாடுபட வேண்டும்.
இத்தனை கொடுமைகளைச் செய்த காங்கிரசுக் கட்சியை எதிர்த்துத் தோற்கடிக்க இவ்வளவு பாடுபட வேண்டுமா, என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.
கொடுமை, உறுமிக்கொண்டு கிளம்பும் சிறுத்தை வடிவிலே மட்டும் இல்லை; பசும்புற்றரையிலே ஒளிந்து கொண்டு நெளியும் பாம்பின் உருவிலேயும் இருந்திடுவது காண்கிறோமே!
ஆகவே, காங்கிரசாட்சியின் கொடுமைகளை மேடைகளில் எடுத்துக் கூறிவிட்டால் போதும், மக்கள் தெளிவு பெற்று, காங்கிரசாட்சியை வீழ்த்துவதற்கான துணிவு பெற்று, நமக்குத் துணை நிற்பர் என்று எண்ணிவிட்டால் போதாது. கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டாக வேண்டும், தோழமை வளர்ந்தாக வேண்டும்.
ஆசைக்கு மயங்கிவிடுவது, அச்சத்துக்கு இடமளித்து விடுவது, இச்சகம் பேசுவோரின் நச்சு வலையில் வீழ்ந்து விடுவது ஆகியவற்றினை நீக்கியாக வேண்டும்.
இதற்கு ஏற்ற முறையில் உன் எதிர்காலப் பணி அமைந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே இதனை எழுதினேன்.
2-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை