154
பிணியெல்லாம் போக்குதற்கு மருந்தைக் கண்டாய்
பிறநாட்டில் பேசுவதை இங்குக் கேட்டாய்
அணுவையும்நின் ஏவலனாய் ஆக்கிக் கொண்டே
அகலுலகைப் புதுமையினால் நிறைத்து விடடாய்
இணையில்லாச் செயற்கைக்கோள் பறக்க விட்டாய்
இயற்கைதனை வென்றேனென் றலறு கின்றாய்
திணிசெருக்கால் உன்னைநீ அழித்தல் கண்டு
சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள் இயற்கை அன்னை!
ஆதிக்க வெறிகொண்டிவ் வண்ட மெல்லாம்
அழித்திடுவேன் நொடியில்என் றறிவிக் கின்றாய்
சோதித்துப் பார்ப்பாயாம் குண்டை வானில்;
தொல்லையினை யோரவில்லை: வருங்காலத்தில்
காதற்றும் காலற்றும் பார்வை யற்றும்
கருப்பையுள் குழவியதும் நலிதல் உண்டாம்
போதித்துப் பார்க்கின்றார் பெரியோ ரெல்லாம்
புழுதியிலே கொட்டியநெய் போலா யிற்றே!
ஏற்றங்கள் பலகண்ட மனிதன் இந்நாள்
இறங்கிவிட்டான் அழிவென்னும் புதைகுழிக்குள்;
காற்றெல்லாம் நஞ்சாக மாறக் கூடும்
கழனியெலாம் கருவற்றுப் போகக் கூடும்
ஊற்றுக்கள் நச்சாறாய் ஓடக் கூடும்
உண்ணுகின்ற மக்கள்உயிர் இழத்தல் கூடும்
கூற்றிங்குத் தலையைவிரித் தாட்டம் போடும்
குவலயமே வெற்றிடமாய்க் காட்சி கொள்ளும்!
பயனுள்ள வாள்தூக்கிப் பகையை வெல்லார்
பதடிகளாய்த் தம்முடலை யரிவார் போலும்
வயலுக்குக் களைநீக்கும் கருவி கொண்டு
வளர்பயிரைத் துண்டாக்க முனைவார் போலும்
கயமைக்கு நல்லறிவை உகுத்தல் போலும்
கருதிவிட்டாய் அணுவாலே யுலகைத் தாக்க
நயமான வேலைக்கே அணுவைக் கொண்டால்
நலமென்பேன் இல்லையேல் அழிவே மிஞ்சும்!
16-5-1965
அண்ணன்,
அண்ணாதுரை