பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

இங்கோ, பதர் கொடுத்து நெல் எனக் கூறிடுவார் போல, அய்யோபாவம்! என்பதனையே சோஷியலிசம் என்று கருதிக்கொள்ளச் சொல்கிறார்கள்.

அவர்கள் கூறிடும் சோஷியலிசத்தில், பொருள் இல்லை; பயன் இல்லை!

பொருளற்றதைப் பேசிடுவதுடன், சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமற்ற முறையில் ஏழைக்காகப் பரிந்து பேசிவிட்டு, ஏழையின் அந்த நிலைமைக்குக் காரணமாக உள்ள முதலாளிகளுடன் கூடிக்குலாவுவதும், அவர்களைக் கொழுக்க வைப்பதுமான செயலில் ஈடுபடுகிறது காங்கிரஸ் கட்சி.

இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே இருந்திருக்கிறது காமராஜரின் மேடைப் பேச்சும், அவருடன் கூடிக் குலாவியவர்களின் பட்டியலின் தன்மையும். இதனை எடுத்து விளக்கிட வேண்டும். இது வெறும் கிணற்றுத் தண்ணீர்; கங்காதீர்த்தம் என்று கூறுவது ஏமாற்றுப் பேச்சு என்பதனை எடுத்துக் கூறிட வேண்டும்—தொடர்ந்து.


6-5-1965

அண்ணன்,
அண்ணாதுரை