பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம் 77

வெற்றிபுரி செல்ல...

தமிழ் நாட்டில் வறுமை—தேர்தல் கால அரசியல்.

தம்பி!

மருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப்போய்க் காட்டுவார்கள்—குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள்—எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக்கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட. வா, தம்பி, வா!

அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடிதுடிக்கிறான் இளைஞன்.

பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை. உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்!—என்று கனிவுடன் கூறிக்கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!!