பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் ‘ஜன்னி’ பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை—என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக் கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலிவளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல—முதல் முறையாகத்தான் சந்தித்தார்!!

தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா!

இதோ! இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி!

உஸ்! பேசாதே! மெல்ல நட!—என்று உத்தரவிட்டுக்கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள்—என்னவென்று கவனிப்போம்.

“வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது. கண்றாவி”

“கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?”

“யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்”

“டாக்டர், என்ன சொல்கிறார்?”

“அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா என்று அலட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்.”

“நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?”


அ.க. 4 — 13