பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா? அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா?

மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம், நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன்—நாய் பிழைப்புத்தான்! இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான்.

அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான். இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம்—படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான்.

தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்!

முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன்—பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாமலிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு வியாபாரத்தால் கொழுத்தவர்—பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன்.

ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்—உடன் இருப்போர், மருத்துவர், அனைவரும்.

சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும் பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர்.

தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடைகூடத் தரக்கூடும்—வசதி உண்டு.

ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக் கொடுத்தார்.

காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்!

இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான்—நல்லது...என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல.