பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205

“மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ......”
“போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே...”
“அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா...”
“உன்னோடு யார் பேசுவாங்க...அதிகமாக எதுவும் வேணாம்...மூக்குத்தி, காதுக்குக் கம்மல்...கையிலே ஒரு இரண்டு வளை......”
“கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு ‘வடம்’ செயின் போடக் கூடாதா அதுக்கு...”
“குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா......?”
“போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு......"

சிரித்துக்கொண்டே செல்கிறாள் செல்லாயி!

“அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா, என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல...செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்.....”

செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக் மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோடார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!!

அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம்.

இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை!