பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்... மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்து தான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா—மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய்.

கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே!

காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது ‘பத்தர்’ வீட்டிலே, ஒரே சிரிப்பு—இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காண முடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமைதாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா!

செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை—முகம் செந்தாமரையாக இருக்கிறது.

காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை—பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்!

இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது, இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்!

மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை!

இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப்படும் கமலாம்பிகையின் உடேலில ஆபரணச் சுமை!!