பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213

இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள், வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது.

இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை. அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும்.

“என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்” என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே.


9—12—1956

அன்பன்,
அண்ணாதுரை