20
இவ்விதமெல்லாம் கூறவில்லை,
காவடி தூக்கினார்
காலடி வீழ்ந்தார்
கன்னத்தில் போட்டுக்கொண்டார்.
என்று சொன்னதுடன், கோவை சுப்ரமணியத்தை அடுத்துக் கெடுத்தார் என்றுதான் கூறப்பட்டது.
காங்கிரஸ் அமைச்சு நடைபெறுகிறது—பெரியார் போர்க்கொடி உயர்த்தினார், வடநாட்டுத் துணிக்கடை, உண்டிச் சாலைகளின் முன்பு மறியல் நடத்தினார். அப்போது, காமராஜர் என்ன செய்தார்?
ஆட்சியில் உள்ளவர்கள் உண்டு, பெரியார் உண்டு, நமக்கென்ன என்று இருந்தாரா? இல்லை!
இதென்ன மறியல்! நாங்கள் செய்த மறியல், மகத்தானது தூய்மையானது — அது சத்யாக்கிரகம் — இது துராக்கிரகம்—என்று கண்டித்தார்.
அடக்குவோம், ஒடுக்குவோம் என்று ஆர்ப்பரித்தார்.
ஆட்சியாளருக்கு இவர் ‘வக்காலத்து’ வாங்கிக்கொண்டு பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அது அவருடைய கடமை அல்லவா, என்று கேட்பர்; ஆம்! ஆம்! கடமை! அதனைக் குறைகூற அல்ல இதுபோது கூறுவது, அந்தச் சமயத்தில் காமராஜர், நல்லவர்—நம்மவர் என்று கூறத்தக்க நிலையில் இல்லை என்பதை நினைவூட்டத்தான்.
காமராஜர் அத்துடன் விடவில்லை; மறியலுக்கு எதிர் மறியல் செய்யப்போவதாகக் கூறினார். எடுத்தனர் எழுதுகோல்-தொடுத்தனர் பாணம்—காமராசர் என்றோர் தலைப்பில் தலையங்கம் வெளி வந்தது விடுதலையில் — அதிலே, காமராசரின் படப்பிடிப்பு முதல்தரமாக அமைந்திருக்கிறது-காண்போம் தம்பி, காண்போம்.