பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

18. சாரதா
19. ஜோக்
20. மாஹி
21. காந்தி சாகர்.

இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள்.

இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு. பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்!

“நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக் கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப்படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்”—என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும் ‘ஒற்றுமை’ இதுபோன்றதுதான், வேறில்லை!

நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்லின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!!

தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.

என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, சென்ன பாசப்பா பேசி இருக்கிறார்.

இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி. மு. கழகமா? அல்லவே!!

நாடு, எண்ணிப்பார்த்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற்கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது.

நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன்.