கடிதம் 69
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!
காமராஜரும் நக்கீரரும்.
தம்பி!
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம், குற்றமே!
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், மான் மழுவேந்திய மகேசன், மாலும் அயனும் தேடித்தேடிப் பார்த்தும் அடியும் முடியும் கண்டறியவொண்ணாதபடி அண்டசராசரமனைத்துமாய் நின்ற அரன், உமையொரு பாகன், சிறுபொறி கிளப்பிச் சிதறினாலே எதிர்ப்பட்டதனைத்தையும் சாம்பலாக்கிடத்தக்கதான ‘சம்ஹார சக்தி’ படைத்த நெற்றிக் கண்ணைக் காட்டினார்—ஏடும் எழுத்தாணியுமின்றி பிறிதோர் பலமற்ற நக்கீரன் எனும் பெரும்புலவர், ஐயனே! யார் நீவிர் என்பதனை அறிந்தேன், எனினும் அச்சம் காரணமாகவோ, பக்திக்குக் கட்டுப்பட்டோ, என் நெஞ்சார உணர்ந்ததை எடுத்துரைப்பதை விட்டுவிடுவேன் என்று மட்டும் எண்ணாதீர், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே! என்று எடுத்துரைத்தாராம்.
தமிழர் பங்கமுறாமல் சங்கம் வளர்த்து, சான்றோராய், ஒழுகி வந்த நாட்களில், தமிழ்ப்பெரும் புலவர்களின்